டெல்லி: தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது என மத்திய அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடத்துவது குறித்து, துபாயில் பிசிசிஐ மற்றும் பிசிபி வாரிய நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல் மற்றும் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை முற்றிலும் நிறுத்தும் வரை இந்தியா பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடாது என்று கூறினார்.
மேலும், பயங்கரவாதம் மற்றும் கிரிக்கெட் ஒன்றாக இணைந்து செல்ல முடியாது என்று கூறிய அவர், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட நாங்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவர்கள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக தெரியவில்லை என்றும் விஜய் கோயல் குற்றம் சாட்டினார்.
முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் நடத்துவது குறித்து ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி 2015ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே 6 இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். தீவிரவாதத்தை ஆதரிக்கும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டு வருவதால் கிரிக்கெட் போட்டிகள் நடத்த பிசிசிஐ மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.