மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக யாரை நியமிப்பது என்பது குறித்து அடுத்த மாதம், சச்சின் உள்ளிட்ட மூன்று மூத்த வீரர்கள் அடங்கிய வழிகாட்டு குழு, ஆய்வு நடத்தி முடிவு செய்யும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின், செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் பிளட்சர் பணிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ரவி சாஸ்திரிதான், வங்கதேச தொடரில் இந்திய அணியுடன் சென்றார்.
தற்போது ஜிம்பாப்வே நாட்டுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரில் இந்திய அணி ஆட உள்ள நிலையில், அடுத்ததாக பலம்மிக்க இலங்கை அணிக்கு எதிராக அந்த நாட்டில் இந்தியா சுற்றுப் பயணம் செய்ய உள்ளது. அதற்கு முன்பாக, ஒரு பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் கூறியதாவது: இந்திய அணிக்கு ஆலோசனை வழங்க, சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் கொண்ட வழிகாட்டு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர், ஜூலை மாதம், கடைசி வாரத்தில் ஒன்று கூடி இந்திய அணிக்கான பயிற்சியாளர் தேர்வு பற்றி ஆலோசிப்பார்கள். இவ்வாறு அனுராக் தாகூர் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் போட்டி நடத்தப்படுமா என்ற கேள்விக்கு, அதுகுறித்து இன்னும் ஆலோசிக்கவில்லை என்று அனுராக் பதிலளித்தார்.