இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் புஷ்-அப் உடற்பயிற்சி செயல் தப்பான இமேஜை தருவதாக பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமர்சனம் செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதை கொண்டாட கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் உள்ளிட்டோர், மைதானத்திலேயே குப்புற படுத்து, புஷ்-அப் செய்தனர். பாகிஸ்தான் ராணுவத்திடம் உடற்பயிற்சி பெற்றதை நினைவுகூறும் வகையில் ராணுவ சல்யூட் மற்றும் புஷ்-அப் இரண்டும் அப்போது செய்யப்பட்டது.
இதுகுறித்து பாகிஸ்தானின், ஆளும், 'முஸ்லிம் லீக் நவாஸ்' கட்சி செனேட்டர் ரானா அப்சல் கான் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார். வெற்றி பெற்றதும் தொழுகை நடத்துவதே சரியாக இருக்கும். புஷ்-அப் செய்வது பாகிஸ்தான் பற்றி நெகட்டிவ் இமேஜை கொடுத்துவிடும் என்று அவர் செனட் நிலைக்குழு கூட்டத்தில் பேசியதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் என்ற பாகிஸ்தானின் முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செயற்குழு தலைவர் நஜாம் சேதியிடம், நிருபர்கள் கேட்டபோது, இனிமேலும் புஷ்-அப் நடைமுறை தொடரும் என கூறிவிட்டார். மீடியாக்கள், கிரிக்கெட்டை அரசியலாக்க வேண்டாம் என்று கூறியுள்ள அவர், செஞ்சுரி விளாசிய பேட்ஸ்மேன் 100 புஷ்-அப்புகளை வேண்டுமானாலும் எடுக்கலாம். நோ பிராப்ளம் என கூறியுள்ளார்.