ராஞ்சி: நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த 3வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. டெல்லியில் நடந்த 2வது போட்டியில் நியூசிலாந்து அணியிடம், இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதனிடையே, இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று, பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் டாசில் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். நியூசிலாந்து அணி இத்தொடரில் வென்ற முதல் டாஸ் இதுதான். இந்திய அணியில் ஜஸ்ப்ரிட் பும்ராவுக்கு பதில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் தவல் குல்கர்ணி சேர்க்கப்பட்டார்.
பும்ரா 3 ஆட்டங்களில், 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். நியூசிலாந்து அணியை பொறுத்தவரை சோடி மற்றும் தேவ்சிச் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். ஹென்ட்ரி மற்றும் ரோஞ்சி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
தொடக்கம் முதலே அடித்து ஆடியது நியூசிலாந்து. இதுவரை சோபிக்காத கப்தில் இன்று சிறப்பாக ஆடினார். அந்த அணியில் அதிகபட்சமாக 72 ரன்கள் விளாசினார். கேப்டன் வில்லியம்சன் 41 ரன்களும், லதாம் மற்றும் டைலர் முறையே 39 மற்றும் 35 ரன்களும் எடுத்தனர். ஸ்பின்னர்கள் வருகைக்கு பிறகு தடுமாறி விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 260 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவ், குல்கர்ணி, பாண்ட்யா, அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரகானே 57 ரன்களும், விராட் கோஹ்லி 45 ரன்களும், அக்சார் பட்டேல் 38 ரன்களும் எடுத்தனர். குல்கர்னி 25 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 - 2 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இதையடுத்து இவ்விரு அணிகளிடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி வரும் 29ல் விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது.