மும்பை: ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது புனே.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஐபிஎல் லீக்கின் 28-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதின. டாசில் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தது மும்பை.
இதையடுத்து களமிறங்கிய புனே சூப்பர்ஜெயன்ட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 31 பந்தில் 45 ரன்களும் ரகானே 32 பந்தில் 38 ரன்களும் எடுத்து வெளியேறினர். டோணி 7 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.
மும்பை தரப்பில் கரண் சர்மா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். ஹர்பஜன் சிங் , மிட்செல் ஜான்சன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதன் பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ், 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக பந்து வீசிய பென்ஸ் ஸ்டோக் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் ஒரு ஓவர் மெயிடன் ஆகும். ஆட்டநாயகன் விருது ஸ்டோகிற்கு வழங்கப்பட்டது.