சிட்னி: இன்றைய போட்டி தொடங்கியதில் இருந்தே அனைத்தும் இந்தியாவுக்கு பாதகமாகவே நடந்து வந்தன.
முதலில் டாசில் இந்தியா தோற்றது. இது மிகப்பெரிய பின்னடைவாகும். டாசில் வெற்றி பெற்ற எந்த அணியுமே சிட்னியில் பேட்டிங்கைதான் தேர்ந்தெடுக்கும். அதைத்தான் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க்கும் செய்தார்.
அடுத்ததாக தொடர்ந்து, 7 போட்டிகளிலும், எதிரணிகளை ஆல்-அவுட் செய்த இந்திய அணியால், இன்று, ஆஸ்திரேலியாவை ஆல்அவுட் செய்ய முடியவில்லை. 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆஸ்திரேலியா 328 ரன்களை எடுத்தது.
மேலும், இந்தியாவின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி, தான்விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் கூட விக்கெட் வீழ்த்தாமல் இருந்ததில்லை. ஆனால், இன்றைய போட்டியில், விக்கெட்டை எடுக்க முடியவில்லை.
முதல் 10 ஓவர்களும் கட்டாய பேட்டிங் பவர் பிளேக்கள் என்று அழைக்கப்படும். இதன்பிறகு, பேட்டிங் அணி, பேட்டிங் பவர் பிளே தேர்வு செய்துகொள்ள முடியும். மிடில் ஓவரில் தேர்வு செய்யப்படும், இந்த பவர்பிளேயின்போது கடந்த 7 போட்டிகளிலும் இந்தியா விக்கெட்டை பறி கொடுத்தது இல்லை.
கடந்த 7 போட்டிகளிலும், மொத்தமாக, பவர் பிளேயில் 32 ஓவர்கள் விளையாடிய இந்தியா, விக்கெட் இழப்பின்றி மொத்தம் 235 ரன்களை சேர்த்திருந்தது.
ஆனால், இன்றோ, பேட்டிங் பவர் பிளேயில் ரஹானே விக்கெட்டை இழந்ததோடு, இந்தியாவுக்கு கிடைத்தது 26 ரன்கள் மட்டுமே. நடப்பு உலக கோப்பையில் முதல் முறையாக விருப்ப பவர்பிளேயில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளது இந்தியா. அதேபோல இதுவரை ஆல் அவுட் ஆகாத இந்திய அணி, முக்கியமான அரையிறுதியில் ஆல் அவுட் ஆகிவிட்டது.
இப்படி, இதற்கு முந்தைய போட்டிகளில் படைக்கப்பட்ட பல சாதனை நிகழ்வுகளை இந்த போட்டியில், இந்தியாவால் காப்பாற்ற முடியவில்லை. இவை அனைத்துமே சேர்ந்து மூழ்கடித்துவிட்டது, இந்திய உலக கோப்பை கனவை.