துபாய்: ஐசிசியின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக் குழுவில் இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தய கிரிக்கெட் வாரியத்தின் பரிந்துரையின் பேரில் ராகுல் டிராவிடை தான் புதிதாக அறிவித்துள்ள ஊழல் தடுப்புக் கண்காணிப்புக் குழுவில் ஐசிசி சேர்த்துள்ளது.
இந்தக் குழுவில் ஐசிசி செயற்குழுவின் தலைவர் இடம் பெறுவார். அவர் போக ராகுல் டிராவிட், சட்ட வல்லுநர் லூயிஸ் வெஸ்டன், ஊழல் தடுப்பு ஆலோசகர் ஜான் அப்பாட் ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.
இந்தக் குழுவில் எக்ஸ் அபிசியோ உறுப்பினர்களாக ஊழல் தடுப்புப் பிரிவு தலைவர் சர் ரோனி பிளானகன், ஐசிசி தலைமை செயலதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் ஆகியோர் இருப்பார்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.
தற்போது இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராக டிராவிட் இருக்கிறார்.
ஊழல் தடுப்புக் கண்காணிப்புக் குழு வருடத்திற்கு ஒருமுறை கூடி ஊழல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கும், திட்டங்கள் வகுக்கும்.