மும்பை: இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலம் கடந்த மாதம் நிறைவடைய இருந்த நிலையில் மீண்டும் அணியின் பயிற்சியாளராக அவர் விரும்பினார். ஆனால் கேப்டன் கோஹ்லிக்கும் அவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக, கும்ப்ளே தனது முடிவை மாற்றிக்கொண்டு, பயிற்சியாளர் பணியிலிருந்து விலகினார்.
கும்ப்ளே விலகியதைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றது. ரவிசாஸ்திரி, வீரேந்திரசேவாக், டாம்மூடி, பில் சிம்மன்ஸ், ரிச்சர்ட் பைபஸ் மற்றும் லால்சந்த் ராஜ்புட் ஆகியோர் விண்ணப்பித்தனர்.
இதையடுத்து கங்குலி, சச்சின் டெண்டுல்கர், லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் அறிவுரை கமிட்டி நேற்று இவர்களிடம் நேர்காணல் நடத்தியது. இருப்பினும் பயிற்சியாளர் யார் என்பதை கேப்டன் கோஹ்லியிடம் கலந்து ஆலோசித்துவிட்டு அறிவிக்க உள்ளதாக கங்குலி பேட்டியளித்தார்.
ஆனால், திடீரென எங்கிருந்தோ வந்த அழுத்தம் காரணமாக, இன்று இரவே பயிற்சியாளர் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்திய அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் நடைபெற உள்ள, இந்தியா- இலங்கை போட்டிகளில் இருந்து பணியை தொடங்குகிறார் ரவி சாஸ்திரி. இவர் இவர் 2014-16ம் காலகட்டத்தில் அணி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். 2019ம் ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை வரை ரவி சாஸ்திரி இந்திய அணி பயிற்சியாளராக இருப்பார்.
கேப்டன் கோஹ்லியின் அபிமானம் பெற்ற ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக வந்துள்ளதால், இந்திய அணிக்குள் இனி மோதல்கள் இருக்காது என நம்பலாம்.