லாடர்டேல், புளோரிடா, அமெரிக்கா: இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான முதல் டி20 போட்டியின்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் எவின் லூயிஸ் அடித்த அடியைப் பார்த்த முன்னாள் கேப்டன் கவாஸ்கர், இன்னொரு முன்னாள் இந்திய ஜாம்பவானான ரவி சாஸ்திரியிடம் கமெண்டரியின்போது, 6வது பாலும் சிக்ஸரா மாறிடும் போலயே என்று கேட்டார்.
லூயிஸ் அடி நேற்று இந்தியாவுக்கு இடியாக மாறி விட்டது ஜஸ்ட் ஒரு ரன்னில் இந்தியா தோல்வியுற்று விட்டது. இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம் லூயிஸ்தான்.
நேற்று ஸ்டூவர்ட் பின்னி போட்ட ஒரே ஒரு ஓவர் மொத்தமாக இந்தியாவுக்குப் பாதகமாக போய் விட்டது. அந்த ஒரு ஓவரில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி அதிரடியாக ரன் குவிக்க வாய்ப்பு ஏற்பட்டு விட்டது.
அந்த ஓவரை சந்தித்தவர் லூயிஸ். ஏற்கனவே அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த அவர் இந்த ஓவரில் சதத்தை எட்டினார். அதுவும் செம ஸ்டைலாக. 5 சிக்ஸர்களையும் ஒரு சிங்கிள் ரன்னையும் இதில் அவர் எடுத்தார். மொத்தம் இந்த ஓவரில் 32 ரன்களை வாரிக் கொடுத்து விட்டார் பின்னி.
லூயிஸ் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தபோது வர்ணனையாளர் வரிசையில் இருந்த கவாஸ்கர், தனக்கு அருகில் இருந்த சாஸ்திரியிடம், சாஸ்திரி 6 பந்து 6 சிக்ஸர் ஆகி விடும் போலயே என்று கேட்டார். சாஸ்திரியே ஒரு முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்து அசத்தியவர் தான்.
மேலும், இந்தியாவின் யுவராஜ் சிங் 2007 உலகக் கோப்பை டி20 போட்டியின்போது ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் விளாசியபோது சாஸ்திரிதான் கமெண்டரி கொடுத்தார். அந்த வகையில் சாஸ்திரிக்கும் இந்தப் போட்டி மறக்க முடியாத ஒன்றாக மாறிப் போய் விட்டது.