மொகாலி: இன்றைய தினம் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நரி முகத்தில் விழித்திருக்க வேண்டும். பல்வேறு சாதனைகள் அவர்களை பின்தொடர்கின்றன.
7, 8 மற்றும் 9வது வரிசையில் களமிறங்கிய இந்திய வீரர்கள் மூவரும் அரை சதம் கடந்தது இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை. அதை அஸ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ் ஆகியோர் சாதித்து காட்டினர்.
அதேபோல 90 ரன்கள் விளாசி தனது சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையில், ஒரு இன்னிங்சில் எடுத்த அதிகபட்ச ரன் என்ற பெருமையை இன்று பெற்றார் ஜடேஜா. இதில் இன்னொரு விஷேசம் என்னவென்றால், அவர் மொத்தம் 170 பந்துகளை சந்தித்து இந்த ரன்னை எடுத்ததுதான்.
இதில் என்ன விஷேசம் என்கிறீர்களா.. 22 டெஸ்ட் போட்டிகளின் 35 இன்னிங்சுகளில் பேட்டிங் செய்திருந்தாலும், இதுவரை ஜடேஜா எந்த ஒரு இன்னிங்சிலும் மொத்தமாக 100 பந்துகளை சந்தித்தது கிடையாது. அதற்கு முன்பே ஒன்று அவுட்டாகியிருப்பார், அல்லது அணி ஆல்-அவுட் ஆகியிருக்கும், அல்லது அணி வெற்றி பெற்றிருக்கும் அல்லது டிக்ளேர் செய்திருக்கும்.
அவரது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இன்றுதான் ஒரு இன்னிங்சில் 100 பந்துகளுக்கும் மேல் சந்தித்துள்ளார். வருங்காலத்தில் நிலைத்து நின்று ஆட ஜடேஜாவுக்கு இது ஊக்கம் கொடுத்திருக்கும் என நம்புவோம்.