ஆலோசகர் சச்சின்
முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பை அணியின் ஆலோசகராக இருந்து ஒவ்வொரு ஆட்டத்திலும் வீரர்களை உற்சாகப்படுத்தினார். வெற்றி குறித்து அவர் ஐ.பி.எல். இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் வெற்றிக்கான பல்வேறு காரணங்களை கூறியுள்ளார்.
உழைப்பால் கிடைத்தது
இந்த சீசனில் எங்களுக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. ஆனால் இவற்றை எங்களது திறனையும், போராட்டக்குணத்தையும் சோதிக்கக்கூடிய தருணங்களாகத் தான் பார்த்தோம். அதனால் ஒருங்கிணைந்து, மிக கடினமாக உழைத்தோம். இந்த வெற்றி தற்செயலாக கிடைத்தது அல்ல. கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு.
பினிஷிங் முக்கியம்
ஒரு தொடரை நீங்கள் எப்படி தொடங்குகிறீர்கள் என்பது பெரிது அல்ல. எப்படி முடிக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். தொடக்க ஆட்டக்காரர் லென்டில் சிமோன்சின் பேட்டிங் மிக நேர்த்தியாக இருந்தது. தொடர் முழுவதும் அவர் தொடர்ந்து ரன் குவித்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அசத்திய பாண்ட்யா
மும்பை அணிக்காக முதல் முறையாக விளையாடிய சில வீரர்களும் மிகச்சிறப்பாக ஆடினார்கள். சுஜித், ஹர்டிக் பாண்ட்யா போன்ற வீரர்கள் என்னை வெகுவாக கவர்ந்தனர். இதே போல் அனுபவ பவுலர் வினய்குமாரும் இந்த ஆண்டில் தான் மும்பை அணிக்காக முதல்முறையாக களம் இறங்கினார். அவரது பந்து வீச்சு தொடக்கத்தில் திருப்திகரமாக இல்லை. ஆனால் சரியான நேரத்தில் உச்சக்கட்ட பார்முக்கு வந்து, அணிக்கு கைகொடுத்தார்.
ரோகித் ஷர்மா வளர்ச்சி
மும்பை அணியின் கேப்டன் பதவியை முதல்முறையாக ஏற்ற ரோகித் ஷர்மாவையும், இப்போதுள்ள ரோகித் ஷர்மாவையும் ஒப்பிட்டு பார்த்தால், கேப்டன் பதவியில் அவர் நல்ல முன்னேற்றம் கண்டு சிறந்த கேப்டனாக உருவெடுத்துள்ளார் என்று தான் சொல்வேன். இப்போது அவர் மிகுந்த நம்பிக்கையை பெற்றுள்ளார்.
ரிக்கி அசத்தல்
தலைமைப் பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங்கிற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் நாங்கள் விளையாடி இருக்கிறோம். அப்போது அவர் ரொம்ப சீரியசாக, பயமில்லாத ஒரு வீரராக செயல்படுவதை பார்த்திருக்கிறோம். எந்த ஒரு தருணத்திலும் நம்பிக்கையையும், தைரியத்தையும் இழக்கமாட்டார். அதே பாண்டிங்காகத்தான் இங்கும் பளிச்சிட்டார். அனுபவத்துடன், நேர்மறை சிந்தனை கொண்டவர்கள் அணிக்கு தேவை. அப்படிப்பட்டவர் தான் ரிக்கிபாண்டிங். இவ்வாறு டெண்டுல்கர் கூறியுள்ளார்.
சென்னையை சீண்டுகிறாரா
டோணி தலைமையிலான சென்னை அணி முதலில் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினாலும், லீக் சுற்றுகளின் பிற்பாதியிலும், பைனலிலும் சொதப்பியது. ஆனால் மும்பை முதலில் தடுமாறி அடுத்தடுத்து வெற்றிகளை சூடியது குறிப்பிடத்தக்கது.