டாக்கா: இந்தியாவை ஒரு நாள் தொடரில் படாதபாடு படுத்திய வங்கதேச கிரிக்கெட் அணி தென் ஆப்பிரி்க்காவிடம் சிக்கி இன்று சிதைந்து போனது.
இரு அணிகளுக்கும் இடையே இன்று நடந்த முதல் டுவென்டி 20 போட்டியில் சிறப்பாக ஆடிய தென் ஆப்பிரிக்கா 52 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
"சென்னை சூப்பர் கிங்ஸ்" கேப்டன் டோணி வங்கதேச டூர் மூலம் அவமானப்பட்டுத் திரும்பினார். ஆனால் இன்று இன்னொரு "சென்னை சூப்பர் கிங்ஸ்" வீரரான பாப் டூபிளஸ்ஸிஸ் மூலம் வங்கதேசம் வறுபட்டு, வதைபட்டது.
பிரமாதமாக ஆடிய பாப் டூபிளஸ்ஸிஸ் 61 பந்துகளில் 79 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து அணிக்கு பெருமை சேர்த்தார். இது இவருக்கு 6வது அரை சதமாகும்.
முன்னதாக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளஸ்ஸிஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க விக்கெட்கள் வேகமாக சரிந்தன. குறிப்பாக ஆப் டிவில்லியர்ஸ் பெரிய ஸ்கோரை எட்டவில்லை. 2 ரன் மட்டுமே எடுத்தார். இதனால் வங்கதேச வீரர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் டூபிளஸ்ஸிஸ் நின்று ஆடி விட்டார்.
ரைலி ரூஸோ அதிரடியாக ஆடி 31 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களைக் குவித்தது.
சுத்தமாக எடுபடாத ரஹ்மான்
இந்தியத் தொடரின்போது இந்திய வீரர்களை நையப்புடைத்த வங்கதேச இளம் வீரர் முஷ்டபிசுர் ரஹ்மான் இந்தப் போட்டியில் சற்றும் எடுபடவில்லை. அவரது பந்தை சொல்லிச் சொல்லி அடித்தனர் தென் ஆப்பிரிக்க வீரர்கள்.
4 ஓவர் போட்ட ரஹ்மான் 30 ரன்களைக் கொடுத்தார். ஆனால் ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.
பின்னர் ஆட வந்த வங்கதேசத்தை தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் பிரித்து மேய்ந்து விட்டனர். குறிப்பாக டேவிட் வீஸ் வெளுத்து விட்டார். 3 ஓவர் வீசிய அவர் வெறும் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களைச் சாய்த்தார். மறுபக்கம் காசிகா ரபடா 2 விக்கெட்களை வீழ்த்தினார். கைல் அப்பாட், பர்னல், ஆரோன் பங்கிசோ ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.
வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹசன் (26), முஷ்பிகர் ரஹீம் (17), லிட்டன் தாஸ் (22) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தைத் தொட்டனர்.
18.5 ஓவரிலேயே 96 ரன்களுக்கு வங்கதேசத்தின் கதை முடிந்தது.