டெல்லி: தற்போதைய இந்திய டி20 அணி நல்ல உத்வேகத்துடன் இருப்பதால் டி20 உலக கோப்பையை இந்தியா வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையை நம் அணி வெல்ல நல்ல வாய்ப்புள்ளது. டி20-யில் மூத்த வீரர்கள் சிலருடன் இளம் வீரர்களும் இணைந்து தற்போது நன்றாக விளையாடி வருகின்றனர்.
ஜஸ்ப்ரீத் பும்ரா ஆஸ்திரேலியாவில் பந்துவீசியதை பார்க்கும் போது, அவர் எவ்வளவு சிறப்பாக வீசினார் என்பது தெரியவரும். அதே போல் ஆஷிஷ் நெஹ்ரா, யுவராஜ், ஹர்பஜன் போன்ற அனுபவ வீரர்கள் மீண்டும் அணிக்கு வந்திருப்பதும் அருமையான விஷயம். இவர்கள் அனைவரும் சேர்ந்து இருப்பதால் நல்ல அணிச்சேர்க்கை உருவாகியுள்ளது.
இந்த அணியுடன் இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும் அளவுக்குச் செல்லும் வாய்ப்புள்ளது என்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் சச்சின் கூறியுள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு, உலகக் கோப்பை டி20 போட்டியை ஐ.சி.சி. நடத்த முடிவு செய்தபோது டோணி தலைமையிலான இளம் இந்திய அணி களம் இறங்கியது. உலகக் கோப்பையில் மிகவும் முக்கியமான தருணத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், இன்றைய உலகின் நம்பர் 1 பவுலர் ஸ்டுவர் பிராடின் பந்துவீச்சை துவம்சம் செய்து, ஆறு பந்தில் ஆறு இமாலய சிக்சர்களை விரட்டி, உலகின் அபாயகரமான வீரர் என்பதை நிரூபித்தார் யுவராஜ் சிங்.
இதையடுத்து இறுதிப் போட்டியில் தனது அபார கேப்டன்ஷிப் திறமையால் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. தற்போது அதே கூட்டணி யுவராஜூம் , தோணியும் டி20 அணியில் இடம்பெற்றால் அணிக்கு கூடுதல் சிறப்பாக இருக்கும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.