டெல்லி: மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கரும், பந்து வீச்சு பயிற்சியாளராக அபய் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி, 49 நாட்கள் மேற்குகிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஜூலை 6ம் தேதி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
இந்த தொடரை இந்தியா தலைமை பயிற்சியாளர் தலைமையில்தான் சந்திக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. விரும்பியது. இதனால் நேற்று முன்தினம் அனில் கும்ப்ளேயை தலைமை பயிற்சியாளராக நியமித்தது.
ஆனால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர்கள் அன்று நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று இந்த இரண்டு பதவிக்கும் பயிற்சியாளரை பி.சி.சி.ஐ. அறிவித்தது.
ஜிம்பாப்வே தொடருக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்த சஞ்சய் பாங்கர், மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், அபய் சர்மா பந்து வீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. சஞ்சய் பாங்கர் ரவி சாஸ்திரி தலைமையில் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.