இஸ்லாமாபாத்: உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தபோது பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிதி மோக்கா மோக்கா பாடல் பாடியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்கியதும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனல் மோக்கா மோக்கா என்ற விளம்பரத்தை ஒளிபரப்பியது. அதுவும் பாகிஸ்தான் ரசிகர்களை கிண்டல் செய்கிறது போன்று இந்த மோக்கா மோக்கா ஒளிபரப்பப்பட்டது. அந்த விளம்பரம் கண்டமேனிக்கு பிரபலமானது.
உலகக் கோப்பை போட்டிகளில் ஜொலிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து நாடு திரும்பியது. இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி வீரரான ஷாஹித் அப்ரிதி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியை நடத்தியவர் கூறுகையில், நம் அண்டை நாடான இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் நம்மை போன்று வீட்டில் அமர்ந்து தான் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்த்துள்ளனர். உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தபோது என்ன செய்தீர்கள் என்று அப்ரிதியிடம் கேட்டார்.
அதற்கு அப்ரிதியோ மோக்கா மோக்கா மோக்கா மோக்கா என்று பாடினார். அப்ரிதியின் பதிலை கேட்டு அரங்கமே அதிர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.