இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பந்து வீசி பல ஸ்டெம்புகளை பறக்க விட்டவர். ஆனால், இப்போதோ, டிவிட்டில் அவர் பல ஆங்கில வித்வான்களை தெறிக்க விட்டுள்ளார்.
நேற்றைய தினம் அக்தர் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் இருந்து கீச்சிய (அல்ல கிறுக்கிய), இந்த டிவிட் உங்களில் யாருக்காவது புரிகிறதா பாருங்களேன்:
"Honour of meeting the first lady of Pakistan who concerned Mount Everest with her share will proud of you Samina ..like the whole country."
இந்த டிவிட்டை படித்ததும் தலை சுற்றி, மயக்கம் வருகிறதா.. தலையை பிய்த்துக்கொள்ள வேண்டும் போல இருக்கிறதா.. குறைந்தபட்சம் சிரிப்பாவது வருகிறதா? இந்த டிவிட்டை படித்த நெட்டிசன்கள் எல்லோருக்கும் இதுதான் தோன்றியது.
ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர் என அறியப்படும் அக்தரா இப்படி தலையும், வாலும் புரியாமல் டிவிட் செய்தார் என விழிபிதுங்கிப்போயுள்ளனர் நெட்டிசன்கள்.
அக்தரை ஓட்ட ஆரம்பித்தனர் அவர்கள். தயாப் கான் என்பவர் "நூறு மைல் வேகத்தில் பந்தை வீசி இந்த மொழியையே பௌல்ட் செய்து விட்டீர்களே" என கூறியுள்ளார்.
தி வைரல் பீவர் என்ற ஹேண்டில் வெளியிட்டுள்ள டிவிட்டில் "பாகிஸ்தானில் ஆங்கிலம் பேசுவோர் மீது அக்தரால் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதல் இது. இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என கேலி செய்துள்ளது.
இப்படி பலரும் வறுக்க தொடங்கியதால், நைசாக டிவிட்டை டெலிட் செய்துவிட்டார் அக்தர். அதற்கு முன்பாகவே, ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைரலாக்கிவிட்டனர் நெட்டிசன்கள்.