கராச்சி: பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகடாமிக்கு முதல் முறையாக மகேந்தர் பால் சிங் என்ற என்ற சீக்கிய வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு கிரிக்கெட் பயிற்சிக்கு சீக்கியர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமி வளாகத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் பல்கலைகழகத்தில் பயின்று வரும் மகேந்தர் பால் சிங் (21) என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மகேந்தர் சிங் பால் பள்ளி பருவத்தில் இருந்தே கிரிக்கெட்டில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். இதுகுறித்து அவர் கூறுகையில், தேசிய கிரிக்கெட் அகடாமிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் என்னுடைய திறமையை வெளிப்படுத்துவேன். பாகிஸ்தான் தேசிய அணியில் விளையாட வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு. கிரிக்கெட்டை பற்றி ஒவ்வொரு நாளும் புதியனவற்றை கற்று வருகிறேன். முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை பெருமையாக கருதுகிறேன் என்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக அந்நாட்டின் தேசிய பயிலகத்தில் சீக்கிய வீரர் ஒருவருக்கு இடம் கிடைத்துள்ளது இதுவே முதல் முறையாகும். இதுவரை, பாகிஸ்தான் அணிக்காக முஸ்லிம் அல்லாத எழுவர் மட்டுமே ஆடியிருக்கும் நிலையில் 8வது வீரராக இடம்பிடிக்கும் நம்பிக்கையுடன் இருக்கிறார் மகேந்தர் சிங் பால்.