லண்டன்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், மேற்கு இந்திய தீவுகள் பவுலர்களை வெளுத்து வாங்கிவிட்டார் ஸ்மிருதி மந்தனா.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இத்தொடரில் இந்திய மகளிர் அணி தனது முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அன்றைய போட்டியில் இங்கிலாந்து பவுலர்கள் ஸ்மிருதி மந்தனாவிடம் சிக்கி சின்னாபின்னமாகினர். அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் நிரூபித்துவிட்டார் ஸ்மிருதி மந்தனா. ஆரம்பம் முதலே மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை நாலாபுறம் அடித்து ஆடினார்.
அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய அவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்து போனார்கள். அந்த அளவுக்கு பேட்டிங்கில் ஒரு ஸ்டைல் இருந்தது, டெக்னிக் இருந்தது, பொறுப்பும் இருந்தது. அடி என்றால் அப்படி ஒரு அடி. மேற்கிந்திய தீவுகள் பவுலிங்கை ச்சும்மா வெளுத்து வாங்கி விட்டார் ஸ்மிருதி.
ஒவ்வொரு ரன்னையும் பார்த்து பார்த்து அடித்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார் மந்தனா. தொடக்க வீராங்கனையாக களமிறங்கி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றிக்கு வித்திட்டார். 108 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்சர்கள் உதவியோடு இந்த ரன்களை குவித்து அசத்தினார்.
முதல் உலககோப்பை போட்டியிலேயே பேட்டிங்கில் மிரட்டி வரும் ஸ்மிருதி, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 90 ரன்களில் அவுட்டாகிய ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். அதை விடாமுயற்சியால் நேற்றைய போட்டியில் சதம் அடித்து நிரூபித்து விட்டார் ஸ்மிருதி மந்தனா.
மும்பையைச் சேர்ந்தவர் ஸ்மிருதி. இடது கை பேட்ஸ்வுமன் மற்றும் வலது ஆப் பிரேக் ஸ்பின்னரும் கூட. அருமையான பேட்ஸ்வுமன். அணியின் முக்கியத் தூண்களில் இவரும் ஒருவர். கடந்த ஆண்டு வலிமையான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் வைத்து சதம் போட்டு அசரடித்தவர் ஸ்மிருதி.