கட்டாக்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம், டி20 தொடரையும் இந்திய அணி இழந்தது.
இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி முதலில், 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2வது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். 3.6 ஓவர்களில் 28 ரன்களை சேர்த்த நிலையில், மோரிஸ் வீசிய பந்தில் ஷிகர் தவான் (11) எல்.பி டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
3வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய விராட் கோஹ்லி 1 ரன் மட்டுமே சேர்த்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடந்த போட்டியில் சதம் அடித்த ரோகித் ஷர்மாவும், 22 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
இதைதொடர்ந்து களம் இறங்கிய ராயுடு ரன் எதுவும் இன்றி வெளியேற, 6 வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய டோணி 4 ரன்களில் மோர்கல் பந்தில் டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றினார். ஓரளவு நம்பிக்கை தந்த ரெய்னாவும் 22 ரன்களில் வெளியேற இந்திய அணி 17.2 ஓவர்களில் 92 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மோர்க்கல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எளிதான வெற்றி இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், நடுவரிசை பேட்ஸ்மேன்கள் மேற்கொண்டு சரிய விடவில்லை.
தென் ஆப்பிரிக்க அணியில் அம்லா (2), டி வில்லியர்ஸ் (19), டு பிளஸிஸ் (16) ரன்களில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி 17.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.