செஸ்டர் லீ ஸ்ட்ரீட் (துர்ஹாம்-இங்கிலாந்து): இலங்கை வேகப் பந்து வீச்சாளர் சமிந்தா எரங்காவின் பந்து வீச்சு குறித்து சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது. இதையடுத்து ஐசிசி அவரது பந்து வீச்சை சோதிக்கவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து வந்துள்ளது. துர்ஹாம் கவுண்டியில் உள்ள செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போது எரங்காவின் பந்து வீச்சு சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்ததாக ஐசிசியில் புகார் தரப்பட்டுள்ளது.
இப்போட்டியில் எரங்கா இரு இன்னிங்ஸ்களிலும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இப்போட்டியில் இங்கிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
29 வயதான எரங்கா, தன்னிடம் ஐசிசி நடத்தவுள்ள சோதனை முடிவு வெளியாகும் வரை தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் ஆடலாம். அதற்கு தடை இல்லை. சோதனை முடிவுக்குப் பிறகுதான் அவர் மீதான நடவடிக்கை குறித்துத் தெரிய வரும்.
எரங்காவின் பந்து வீச்சு சட்டவிரோதமாக இருந்தால் அவர் தனது பந்து வீசும் ஸ்டைலை திருத்திக் கொள்ளும் வரை கிரிக்கெட் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படுவார்.
முன்னதாக இலங்கை அணி இரு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி தடுமாற்றத்துடன் உள்ளது. அந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களான தம்மிகா பிரசாத், துஷ்மந்தா சமீரா ஆகியோர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலையில் எரங்கா விவகாரம் இலங்கை அணியை அதிர வைத்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ஜூன் 9ம் தேதி முதல் 13ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.