டெல்லி: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்க 2 ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற சில அணிகள் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுபற்றி விசாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகள் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கூறி, ஐ.பி.எல். போட்டிகளில் இரு அணிகளும் 2 ஆண்டுகள் விளையாட தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த தடை உத்தரவை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பிலும், பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியசாமி சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்ச், இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி சார்பில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மனுவில் ஐ.பி.எல். போட்டிகளில் தடைவிதிக்கப்பட்ட அணிகளில், நிர்வாகிகள் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஒரு சிலருடைய தவறுகளுக்காக ஒட்டுமொத்த அணிக்கும் தடை விதிப்பதை ஏற்க முடியாது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை மக்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டு மக்களுக்கே பெருமை சேர்க்கும் அணியாக திகழ்ந்தது. இந்த அணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே சென்னை அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.