சென்னை: சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி.நடராஜன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இன்று முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
யாருமே எதிர்பார்க்காத வகையில் இவரை பஞ்சாப் அணி இவ்வாண்டு நடைபெற்ற ஏலத்தின்போது, ரூ.3 கோடி கொடுத்து வாங்கியிருந்தது. சர்வதேச கிரிக்கெட் ஆடாத உள்ளூர் ஆட்டக்காரர் ஒருவர் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
டி.நடராஜன் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளராகும். முழுப்பெயர் தங்கராசு நடராஜன். முன்னதாக, தமிழ்நாடு லீகில் ஜாலி ரோவர்ஸ், விஜய் சிசி ஆகிய அணிகளுக்காக ஆடி தனது திறமையை நிரூபித்தார்.
இதையடுத்து நடராஜன் முதல் தர கிரிக்கெட்டுக்கு தேர்வு செய்யப்பட்டார். 2015-16-ல் பெங்கால் அணிக்கு எதிராக தமிழ்நாடு அணிக்கு முதல்முறையாக அறிமுகமானார். ஆனால் இவர் பந்தை எறிவதாக, சந்தேகம் எழுப்பப்பட்டது. எனவே பந்து வீச்சு ஸ்டைலை கொஞ்சம் மாற்றி மீண்டும் முதல்தர கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார்.
[வறுமையை வென்று கிரிக்கெட்டில் ஜெயித்தார்.. ஐபிஎல் ஹீரோ நடராஜன் வாழ்க்கை, இளைஞர்களுக்கு பாடம்]
சமீபத்தில் தொடங்கப்பட்ட, தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20யில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடினார். முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி இவரது பந்து வீச்சிற்கு ஐடியாக்கள் கொடுத்து மெருகேற்றினார். ஐபிஎல் ஹீரோ தற்போது ரஞ்சியிலிருந்து மற்றொருபடி முன்னேறி ஐபிஎல் 2017ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக களமிறங்கியுள்ளார்.
இன்றைய போட்டியில் 7வது ஓவரை இவர் வீசினார். முதல் பந்தில் ஸ்மித் சிங்கிள் ரன் எடுத்தார். 2வது பந்தில் அஜிங்ய ரஹானே இவரது பந்து வீச்சில் அவுட்டானார். ஸ்டோய்னிஸ் கேட்ச் பிடித்து ரஹானேவை வழியனுப்பி வைத்தார். கடந்த போட்டியில் அதிரடி காட்டிய ரஹானே இப்போட்டியில் நடராஜனிடம் 19 ரன்களில் வீழ்ந்தது சிறப்பு.