திண்டுக்கல்: தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் திருவள்ளூர் அணி, மதுரை ஜெயிண்ட்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட்டின் நேற்றைய போட்டியில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியும், மதுரை ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற திருவள்ளூர் அணி முதலில் பேட் செய்தது.
திருவள்ளூர் அணியில் ஹரி நிஷாந்தும், சதுர்வேத்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஹரிநிஷாந்த் 19 ரன்னிலும், சதுர்வேத் 42 ரன்னிலும் (38 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தனர். இதன் பின்னர் வந்த வீரர்கள் சஞ்சய் யாதவ் (28 ரன், 19 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) தவிர வேறு யாரும் குறிப்பிடும்படி ஆடவில்லை. பொறுப்பு கேப்டன் ரங்கராஜன் 3 ரன்னில் ஏமாற்றினார். 20 ஓவர் முடிவில் திருவள்ளூர் அணி 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது.
பின்னர் விளையாடிய மதுரை அணி தொடக்கத்தில் ஒரு விக்கெட்டுக்கு 85 ரன்களுடன் (11.5 ஓவர்) வலுவான நிலையில் காணப்பட்டது. கேப்டன் ஷிஜித் சந்திரன் 40 ரன்களில் (32 பந்து, 7 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனதும் நிலைமை தலைகீழானது.
அதன் பிறகு திருவள்ளூர் பவுலர்களின் ஆதிக்கம் படிப்படியாக ஓங்கியது. 14 முதல் 17 ஓவர்கள் வரை பந்து எல்லைக்கோடு பக்கமே செல்லவில்லை. இதனால் மதுரை அணி கடும் நெருக்கடிக்குள்ளானது. கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது.
19-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் ஆர்.ரோகித் அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி அசத்தியதுடன் தங்கள் அணியின் வெற்றிக்கு 'பாலம்' அமைத்து தந்தார். இதைத் தொடர்ந்து இறுதி ஓவரில் 19 ரன் தேவைப்பட்ட போது அதில் மதுரை அணி 12 ரன் மட்டுமே எடுத்து இரண்டாவது தோல்வியை தழுவியது.
மதுரை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 137 ரன்களே எடுத்தது. இதன் மூலம் திருவள்ளூர் அணி 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. ஏற்கனவே காரைக்குடி காளையை வீழ்த்தியிருந்த திருவள்ளூர் அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.