சென்னை: இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒருமணி நேரத்திலே விற்றுத் தீர்ந்ததால் சென்னை ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-0 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலை வகிக்கிறது. ராஜ்கோட் டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் டிசம்பர் 16 முதல் 20 வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
ரூ.300, ரூ.500, ரூ.3000, ரூ.4000 ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ஒருவருக்கு அதிகபட்சமாக இரு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் அனுமதிக்கப்பட்டன.
ஆன்லைனில் டிக்கெட் பெற விரும்புபவர்கள் www.bookmyshow.com என்ற இணையத்தளத்தின் மூலம் டிக்கெட் பெறலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்தார். ஆனால் நேற்று காலை தொடங்கிய ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஒரு மணி நேரத்தில் முடிவடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அதிகவிலை டிக்கெட்டுகள் ஆன்லைனில் மீண்டும் விற்பனைக்கு வைக்கப்பட்டன.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்குக் கூட்டமே வருவதில்லை என்று ஐசிசி கவலைப்படும் இந்த நேரத்தில் சென்னையில் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒருமணி நேரத்திலே விற்றுத்தீர்ந்துள்ளது.