சென்னை: ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்ட பிரச்சினை காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் இரண்டு ஆண்டுகள் நடைபெற வாய்ப்பில்லை. அத்துடன் கேலரி பிரச்சினையை காரணம் காட்டி சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் எந்தவொரு ஆட்டமும் சென்னைக்கு ஒதுக்கப்படவில்லை.
எனவே சென்னை ரசிகர்கள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்தை நேரில் பார்த்து ரசிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ரசிகர்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு பிரிமியர் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டியை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த போட்டி ஆகஸ்டு மாதம் 27ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறுகிறது.
இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கும். ஆட்டங்கள் சென்னை, நெல்லை மற்றும் திண்டுக்கல்லில் (நத்தம்) நடைபெறும். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள். 888 வீரர்கள் இந்த பிரிமியர் லீக்கில் பங்கேற்க தகுதிபடைத்தவர்களாகும்.