திண்டுக்கல்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஐ.பி.எல். பாணியில் முதல் முறையாக தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா சிமெண்ட்ஸ் - டி.என்.பி.எல் என்று அழைக்கப்படும் இந்த போட்டி நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) தொடங்கி செப்டம்பர் 18ம் தேதி வரை நடக்கிறது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம், நத்தம் என்.பி.ஆர். கல்லூரி (திண்டுக்கல்) நெல்லை ஐ.சி.எல். மைதானம் ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. 28 லீக் ஆட்டம், இரண்டு அரை இறுதி, இறுதிப்போட்டி உள்பட மொத்தம் 31 ஆட்டம் நடைபெறும்.
இந்தப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (தென்சென்னை), தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் (தூத்துக்குடி), ரூபி காஞ்சி வாரியர்ஸ் (காஞ்சீபுரம்), வி.பி. திருவள்ளூர் வீரன்ஸ் (திருவள்ளூர்), மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் (மதுரை), திண்டுக்கல் டிராகன்ஸ் (திண்டுக்கல்), லைகா கோவை கிங்ஸ் (கோவை), காரைக்குடி காளை (காரைக்குடி) ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஐ.பி.எல். பாணியிலேயே இந்த தொடர் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் குறிப்பிட்ட தொகைக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
உள்ளூர் திறமைசாலிகளுடன், ஆர்.அஸ்வின் (திண்டுக்கல்), பத்ரிநாத் (காரைக்குடி), முரளி விஜய் (கோவை), தினேஷ் கார்த்திக், எல்.பாலாஜி (தூத்துக்குடி) உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களும், ஆர்.சதீஷ், தலைவன் சற்குணம், யோமகேஷ் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்) போன்ற ஐ.பி.எல்.லில் ஆடிய அனுபவம் வாய்ந்த வீரர்களும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் அங்கம் வகிக்கிறார்கள்.
நேற்றுமுன்தினம் நடந்த முதல் போட்டியில், சொந்த மண்ணில் சேப்பாக் அணி தோற்றது. தூத்துக்குடி வெற்றி வாகை சூடியது. இரண்டாவது போட்டியில் நேற்று திண்டுக்கல் மைதானத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் மற்றும் காரைக்குடி காளை அணிகள் இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற திருவள்ளூர் வீரன்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முதலில் பேட் செய்த காரைக்குடி காளை அணி 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்ரீனிவாசன் 50 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவங்கிய திருவள்ளூர் வீரன்ஸ் அணி ரன் கணக்கை துவங்குவதற்கு முன்னரே விக்கெட்டை பறிகொடுத்தது. ஆனால், அதன் பிறகு களம் இறங்கிய கேப்டன் அப்ரஜித் களத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பந்துகளை சிக்சரும் பவுண்டரிகளுமாக பறக்க விட்ட அவர் சதம் அடித்து அசத்தினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற அப்ரஜித் 63 பந்துகளில் 6 சிக்சர் 12 பவுண்டரிகள் உட்பட 118 ரன்கள் சேர்த்தார். அப்ரஜித்தின் அதிரடியால் 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி வெற்றி பெற்றது.
முதலில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் நிதானமாக 34 பந்துகளில் அரை சதம் கடந்த அப்ரஜித், அடுத்ததாக பந்துகளை தெறிக்கவிட்டு 23 பந்துகளில் சதம் கடந்தார். டோணியை போலவே நிதானமாக ஆட வேண்டிய நேரத்தில், நிதானமாகவும், அதிரடி காட்ட வேண்டிய நேரத்தில் அதிரடியும் காட்டினார் அப்ரஜித்.
This kid can play! What a great knock by Baba Aparajith! https://t.co/wk2enkT1q6
— Dean Jones (@ProfDeano) August 25, 2016
வர்ணணையாளர் டீன் ஜோன்ஸ்சும் அப்ரஜித்தை மனமாற பாராட்டியுள்ளார். அடுத்த டோணி என கூறிய ஒரு டிவிட்டை அவர் ரீ டிவிட் செய்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட அப்ரஜித்துக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. உட்காரவே வைக்கப்பட்டிருந்தார். ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி விளாசி ஐபிஎல் அணிகள் கவனத்தை ஈர்த்துள்ளார்.