புனே: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், ஒரே பந்தில் இரு விக்கெட்டுகளை வீழ்த்திய நிலை ஏற்பட்டது, இந்தியாவுக்கு.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள்கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் புனேயில் இன்று தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற ஆஸி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், மேட் ரென்ஷா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவருமே இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதால் இந்திய ஆப் ஸ்பின்னர்கள் அஸ்வின், ஜெயந்த் யாதவ் ஆகியோருக்கு அவர்களை கட்டுப்பாட்டில் வைப்பதில் சிரமம் ஏற்படவில்லை. இஷாந்த் ஷர்மாவும் மிரட்டினார்.
நோபால்
இருப்பினும் நீண்ட நேரமாக விக்கெட் விழவில்லை. பல முறை பேட்டின் அருகே பந்து கடந்து சென்றபோதிலும், அவுட்டாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 15வது ஓவரில், வார்னர் 20 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜெயந்த் யாதவ், பந்தில் அவர் பௌல்ட்டானார். ஆனால் கிரீசுக்கு வெளியே காலை வைத்து எறியப்பட்ட நோ-பால் என அது அறிவிக்கப்பட்டது.
Gee whiz... Warner was bowled off this massive no ball #INDvAUS pic.twitter.com/VEms2OZRoL
— cricket.com.au (@CricketAus) February 23, 2017
அந்த பந்தை டிவி ரீப்ளேயில் போட்டு காண்பித்தபோது, ஜெயந்த் யாதவ், மிகப்பெரிய அளவில் காலை வெளியே வைத்து பந்தை எறிந்தது தெரியவந்தது.
இரண்டு பேரும் நடையை கட்டினர்
முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 82 ரன்கள் குவிக்கப்பட்டது. இருப்பினும் உமேஷ் யாதவ், வார்னரை 38 ரன்களில் பௌல்ட் செய்தார். இதையடுத்து பெவிலியனை நோக்கி நடையை கட்டினார். அப்போது சர்ப்ரைசாக, ரென்ஷாவும், பெவிலியனை நோக்கி நடையை கட்ட ஆரம்பித்தார். அவர் 36 ரன்கள் எடுத்திருந்தார். 89 பந்துகளை சந்தித்திருந்தார்.
வயிற்று கலக்கம்
மைதானத்திற்குள் வந்து கொண்டிருந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூட இதை பார்த்து ஆச்சரியப்பட்டார். பிறகுதான் தெரிந்தது, வயிற்றுக்குள் ஏற்பட்ட கலக்கத்தின் காரணமாக, ரென்ஷா வெளியேறியது. இதனால் ஒரே பந்தில் இரு விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதை போன்ற நிலை ஏற்பட்டது.
வெயிலா, பயமா
இதையடுத்து மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார். புனேயில் அதிகபட்சம் 36 டிகிரி வெயில் அடித்தது. இந்த வெயிலை தாங்க முடியாமல் ரென்ஷாவுக்கு வயிற்றில் கலக்கம் ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மதியம் உணவு இடைவேளைக்கு பிறகும், ரென்ஷா களத்திற்கு வரவில்லை.
சுழற்பந்து
பிட்சில் சுழற்பந்து வெகுவாக எடுபட்டது. பந்துகள் தாறுமாறாக டர்ன் ஆகின. ஆஸ்திரேலிய இளம் வீரர் ரென்ஷாவால் இதை சமாளிக்க முடியவில்லை. பல பந்துகள் பேட்டில் படாமல் விக்கெட் கீப்பரிடம் தஞ்சம் புகுந்தன. இதையெல்லாம் பார்த்துதான் ரென்ஷாவுக்கு பயத்தில் வயிறு கலக்கிவிட்டது என சமூக வலைத்தளங்களில் இந்திய ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.