சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் பைனுலுக்கு இரண்டாவது முறையாக தகுதி பெற்றுள்ளது தூத்துக்குடி அணி.
சென்னையில் நடந்த ஆட்டத்தில், சேப்பாக் கில்லீஸ் அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, மீண்டும் பைனலுக்கு நுழைந்தது நடப்பு சாம்பியன் தூத்துக்குடி.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி, இரண்டாவது ஆண்டாக நடந்து வருகிறது. புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த, தூத்துக்குடி மற்றும் சேப்பாக்கம் அணிகளுக்கு இடையேயான, பிளே ஆப் சுற்றின், தகுதிச் சுற்று-1 ஆட்டம், சென்னையில் நேற்று இரவு நடந்தது.
டாஸ் வென்ற சேப்பாக்கம் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
ஆனால், ஏதோ அவசர வேலை இருப்பது போல், வந்த வேகத்தில், சேப்பாக் வீரர்கள் அவுட்டாகினர். 20 ஓவர்களில், 114 ரன்களுக்கு ஆல்அவுட்டாகினர். கார்த்திக்,33 ரன்கள், அந்தோணி, 27 ரன்கள் எடுத்து மானத்தை காப்பாற்றினர். தூத்துக்குடியின் டேவிட்சன் 25 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர், 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதெல்லாம் ஒரு ஸ்கோரா, லெப்ட்லேயே அடிப்போம் என்று, களமிறங்கியது தூத்துக்குடி. இந்தத் தொடரில், அதிக ரன்கள் எடுத்தவர்களில் முதலிடத்தில் உள்ள வாஷிங்டன் சுந்தர், அனாயாசமாக விளையாடி, 36 பந்துகளில், 73 ரன்கள் எடுத்தார். டி.என்.பி.எல்., தொடரில், அதிவேக அரைசதம் அடித்தார் சுந்தர். 15 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார்.
காந்தி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சொதப்பிய நிலையில், அபினவ் முகுந்த், 27 பந்துகளில், 33 ரன்கள் எடுத்து, அணியின் வெற்றிக்கு உதவினார்.
சேப்பாக்குக்கு வாய்ப்பு இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும், சென்னை சேப்பாக் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது.
இன்று நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் காரைக்குடி, கோவை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன், வரும், 18ம் தேதி நடக்கும், தகுதிச்சுற்று 2ல் சென்னை சேப்பாக்கம் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணிதான், வரும், 20ம் தேதி சென்னையில் நடக்கும் பைனலுக்கு நுழையும். தூத்துக்குடி பைனலுக்கு நேரடியாக நுழைந்துவிட்டது. இருந்தாலும், சென்னை சேப்பாக்கம் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது.