சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி தொடக்க ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஐ.பி.எல். பாணியில் முதல் முறையாக தமிழ்நாடு பிரீமியர் 'லீக்' 20 ஓவர் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா சிமெண்ட்ஸ் - டி.என்.பி.எல் என்று அழைக்கப்படும் இந்த போட்டி நேற்று மாலை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கின. தொடக்க ஆட்டத்தில் டாஸ் வென்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வாஷிங்டன் சுந்தர், கவுசிக் காந்தி 4-வது ஓவர்கள் முடிவில் அணிக்கு 35 ரன்களை சேர்த்து இருந்தனர். இதனையடுத்து கவுசிக் காந்தி விக்கெட்டை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஆர். சதிஷ் கைப்பற்றினார். இதனையடுத்து தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். 5 ஓவர்கள் முடிவில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
5 ஓவர்கள் முடிவில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இரண்டு விக்கெட்கள் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்து இருந்தது. தினேஷ் கார்த்திக் 12 ரன்னுடனும், மாருதி ராகவ் 12 ரன்னுடனும் களத்தில் நின்றனர். அடுத்த ஓவரில் மாருதி ராகவ் ஆட்டமிழந்தார். 15-வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்திருந்தது.
போட்டியின் 19 வது ஓவரில் 2 சிக்சர் அடித்த தினேஷ் கார்த்திக், டி.என்.பி.எல்., தொடரில் முதல் அரைசதம் எட்டினார். இந்த ஓவரில் மட்டும் துாத்துக்குடி அணி 17 ரன் எடுத்தது.
தொடர்ந்து 20 வது ஓவரிலும் சிக்சர், பவுண்டரி என தினேஷ் கார்த்திக் விளாச, 17 ரன் கிடைத்தது. 20 ஓவரின் முடிவில், துாத்துக்குடி அணி 5 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் (67), சத்யநாராயணன் (0) அவுட்டாகாமல் இருந்தனர். சேப்பாக்கம் அணி சார்பில் சதீஷ் 2, யோ மகேஷ், தாஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதனை அடுத்து விளையாடிய சூப்பர் கில்லீஸ் அணிக்கு கோபிநாத் (11), யோ மகேஷ் (14) ஏமாற்றம் தந்தனர். ஆகாஷ் வேகத்தில் சற்குணம் (29 ரன், 21 பந்து), சசிதேவ் (0) அவுட்டாகினர். 'சீனியர்' பாலாஜியிடம் சிக்கிய சதீஷ், ராகுல் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் 'டக்' அவுட்டாக, சேப்பாக்கம் அணி 10 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 63 ரன்கள் மட்டும் எடுத்து திணறியது.
அடுத்து வந்த ஆன்டனி தாஸ் (14), வாசுதேவன் (2), சரவணன் (19) நீடிக்கவில்லை. சேப்பாக்கம் அணி 19.4 ஓவரில், 119 ரன்னுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் தூத்துக்குடி அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிஷோர் (10) அவுட்டாகாமல் இருந்தார். துாத்துக்குடி சார்பில் ஸ்ரீனிவாஸ், ஆகாஷ் தலா 3 விக்கெட் வீழ்த்தினார். அரைசதம் விளாசிய தூத்துக்குடி அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.