சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், திண்டுக்கல்லுக்கு எதிரான போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றுள்ளது.
டிஎன்பிஎல் தொடரின் 2-வது சீசன் போட்டிகள் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. தொடக்க விழாவில் கிரிக்கெட் வீரர் டோணி சிக்சர் மழையைப் பொழிந்து போட்டியை தொடங்கி வைத்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கிய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தினேஷ் கார்த்திக் தலைமையிலான ஆல்பர்ட் டூட்டி பேட்ரி யாட்ஸ், அஸ்வின் வெங்கடராமன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற தூத்துக்குடி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 69, காந்தி 46, நாதன் 20, ஆனந்த் 26 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு தூத்துக்குடி அணி 184 ரன்கள் எடுத்தது.
திண்டுக்கல் அணியின் சஞ்சய், நடராஜன், விவேக், விக்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு திண்டுக்கல் அணி களமிறங்கியது. அந்த அணியின் கங்கா ஸ்ரீதர் ராஜூ நிலைத்து நின்று போராடி 55 பந்துகளில் 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய விவேக் 13 பந்துகளில் 36 ரன்கள் விளாசி ரன் அவுட் ஆனார். கேப்டன் அஸ்வின் வெங்கட்ராமன் 26 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டானதால் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது திண்டுக்கல் அணி. இதன் மூலம் நடப்பு சாம்பியனான தூத்துக்குடி அணி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று அசத்தியுள்ளது. வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச்சென்றார்.