பெர்த்: ஐக்கிய அரபு எமிரேட்ஸை இந்தியா எளிதாக வீழ்த்தியது என்றாலும் கூட எமிரேட்ஸ் அணியிலும் கூட சில நல்ல விஷயங்கள் கண்ணில் படத்தான் தெரிந்தன.
பேட்டிங்கில் அந்த அணி மிகவும் மோசமாகி ஆடியது என்பதில் சந்தேகம் இல்லை. நமது சுழற்பந்து வீச்சை சுத்தமாக அவர்களால் சமாளிக்கவே முடியவில்லை. பந்து எங்கு வருகிறது, எப்படி வருகிறது என்பதைக் கூட அவர்களால் அனுமானிக்க முடியவில்லை. இதனால் அஸ்வின், ஜடேஜாவிடம் மொத்தமாக அவர்கள் விழுந்து போனார்கள்.
ஆனால் அவர்களது பந்து வீச்சாளர்கள் அவ்வளவு மோசம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் நமது பந்து வீச்சாளர்களை விட சற்று பெட்டர்தான் என்பது உற்றுப் பார்த்தால் தெரியும்.
இந்திய பந்து வீச்சாளர்கள் அனுபவம் மிக்கவர்கள், அதிலும் எமிரேட்ஸ் வீரர்களை விட நிபுணர்களும் கூட. ஆனால் அப்படிப்பட்ட இந்திய பந்து வீச்சாளர்கள் 13 எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கினர். அதேசமயம், எமிரேட்ஸ் பந்து வீச்சாளர்கள் ஒரு எக்ஸ்ட்ரா ரன் கூட விட்டுக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர்களது பந்து வீச்சும் கூட நேர்த்தியாகவே இருந்தது. பந்தை பெரும்பாலும் நேராக போட்டார்கள். இது கவனிக்கத்தக்கது. அதிலும் குருகே பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அந்தப் பந்து வீச்சில் தவான் திணறியதைக் காண முடிந்தது. கோஹ்லி கூட அடித்து ஆட யோசித்தார். ரோஹித்தும் அதேபோல திணறினார். மற்றவர்களின் பந்துகளில்தான் இவர்கள் ஆடினார்கள்.
6 ஓவர்கள் வீசிய குருகே 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஒரு மெய்டனும் போட்டார். அழிவிலும் கூட குருகே எமிரேட்ஸ் அணிக்கு ஒரு அருமையான பந்து வீச்சைக் கொடுத்தார்.
அதிக ரன்களை வாரிக் கொடுத்தவர் என்றால் அது நவீத் மட்டுமே. ஆனால் அவரது பந்து வீச்சிலும் கூட நமது வீரர்கள் திணறவே செய்தனர். ஆரம்பத்தில் நமது வீரர்கள் விளையாடியதைப் பார்த்தபோது எங்கே 30 ஓவர்களுக்கு மேல் ஆடுவார்களோ என்றுதான் தோன்றியது. அப்படி நிதானமாக ஆடி வந்தனர் இந்திய வீரர்கள்.
நேற்றைய வெற்றி மேலோட்டமாக பார்ப்பதற்கு எளிதான வெற்றி போலத் தெரிந்தாலும் கூட எமிரேட்ஸின் பந்து வீச்சு காரணமாகவே போட்டி 19 ஓவர் வரை நீண்டதாகவே கருதத் தோன்றுகிறது.