புனே: ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் விளையாடியபோது மும்பையின் ஹர்பஜன் சிங்கிற்கும் அம்பட்டி ராயுடுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
டோணி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
டோணி அணியின் பேட்ஸ்மேன் அடித்த பந்து பவுண்டரியை நோக்கி வந்தபோது ராயுடு பாய்ந்து சென்று அதை தடுக்க முயன்றார். ஆனால் அப்படியும் அந்த பந்து பவுண்டரிக்கு சென்றுவிட்டது.
இதை பார்த்த ஹர்பஜன் சிங் கடுப்பாகி ராயுடுவை திட்டிவிட்டார். "பஜ்ஜி" திட்டியதால் ராயுடு கோபம் அடைந்தார். உடனே ஹர்பஜன் சிங் ராயுடு அருகில் வந்து அவரை சமாதானம் செய்தார். ஆனாலும் சமாதானம் ஆகாத ராயுடு ஹர்பஜன் சிங்கின் கையை தட்டிவிட்டு ஏதோ கூறிக் கொண்டே கோபமாக சென்றுவிட்டார்.
மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் இரண்டு வீரர்கள் சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.