திண்டுக்கல்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பந்து தாக்கியதில் ஆஸ்திரேலிய நாட்டு நடுவர் ஜான்வாட் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். அவருக்கு திண்டுக்கல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்றுப் போட்டிகள் இன்று நாடு முழுவதும் பல மைதானங்களில் நடைபெறுகின்றன. இதில் தமிழகம்- பஞ்சாப் இடையேயான கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அருகே நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்றைய போட்டியில் தமிழக வீரர் சந்திரசேகர் வீசிய பந்தை பஞ்சாப் வீரர் பல்விந்தர்சிங் அடித்தார். அந்த பந்து நடுவராக இருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜான்வாட்டை தாக்கியது. இதில் மயக்கம் அடைந்த ஜான்வாட் மைதானத்திலேயே விழுந்தார்.
பின்னர் அவர் திண்டுக்கல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.