சிட்னி: அம்பயர்கால் நடைமுறையால்தான் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் விக்கெட் நமக்கு கிடைக்காமல் போனதாக இந்திய ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.
இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி ஆட்டத்தில், 22.4வது ஓவரில் 43 ரன்களுடன் பின்ச் பேட் செய்து வந்தார். அப்போது ஜடேஜா பந்தை எதிர்கொண்டார். அந்த பந்து பேட்டில் படாமல், பின்ச் காலில் பட்டது. எனவே அவுட் கேட்டு பார்த்தார், ஜடேஜா. அம்பயர் தரவில்லை. எனவே ரிவ்யூ கேட்டார். ஆனால், டோணிக்கு முழு திருப்தியில்லை. வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தார். ஆனால் ஜடேஜா, பிடிவாதமாக அது அவுட்தான் என்றதால் ரிவ்யூ கேட்டார் டோணி.
இதையடுத்து ரிவ்யூ கேட்கப்பட்டது. டிவி ரிப்ளேயில் பார்த்தபோது, அந்த பந்து ஸ்டம்பை பதம் பார்த்திருக்கும் என்று வரைபடம் கூறியது. எனவே இந்திய ரசிகர்கள் பின்ச் அவுட் ஆகிவிட்டார் என்று நினைத்தனர். ஆனால் மூன்றாம் நடுவரோ அம்பயர் கால் என்று அறிவித்துவிட்டார். எனவே களநடுவர் ரிச்சர்ட் அவரது டிவிலேயே உறுதியாக நின்று, அதை அவுட் இல்லை என்று அறிவித்துவிட்டார். இந்த அம்பயர் கால் நடைமுறை மீது இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.
கிரிக்கெட் ஆட்டத்தில் களத்திலுள்ள இரு நடுவர்களுக்கும், பேட்ஸ்மேன் அவுட் விவகாரத்தில் சந்தேகம் ஏற்பட்டால், மூன்றாவது நடுவரை தொடர்பு கொண்டு கேட்பது நடைமுறை. மூன்றாவது நடுவர் தொலைக்காட்சியில் மீண்டும் அந்த காட்சியை போட்டு பார்த்து முடிவை அறிவிப்பார். சிவப்பு விளக்கை ஆன் செய்தால், பேட்ஸ்மேன் அவுட் என்றும், பச்சை விளக்கை ஆன் செய்தால் பேட்ஸ்மேன் அவுட் இல்லை என்றும் முடிவுகள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதன்பிறகு பெரிய திரைகளில் அவுட் அல்லது நாட்-அவுட் என்ற எழுத்துக்கள் வரும் வகையில் தொழில்நுட்பம் மாற்றப்பட்டது.
ஆனால், டிஆர்எஸ் என்னும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் நடைமுறை சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, நடுவருக்கு சந்தேகம் வந்தால் மூன்றாவது நடுவரை அணுகுவதை போல, வீரர்களுக்கு நடுவர் முடிவின் மீது சந்தேகம் இருந்தால் டிஆர்எஸ் கேட்கலாம்.
எல்பிடபிள்யூ, கேட்ச் போன்ற பல்வேறு விஷயங்களில் களத்தில் உள்ள அம்பையர் முடிவு தவறாக இருப்பதாக உணரும்பட்சத்தில், அதை மறுபரிசீலனை செய்ய கோரிக்கைவிடுக்கும் அதிகாரம் அணி கேப்டன்களுக்கு, தரப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் எண்ணிக்கை வரைமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மறு பரிசீலனை செய்யும்போது, எல்பிடபிள்யூவிற்கான அப்பீல் என்றால் பந்து பிட்ச் ஆன இடம், அது எழும்பி சென்ற உயரம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, அந்த பந்து ஸ்டம்பில் படவாய்ப்பிருந்ததா, இல்லையா என்பதை கணித்து, மூன்றாம் நடுவர் முடிவை அறிவிப்பார். கேட்சுக்கான அப்பீல் என்றால், பந்து பேட்டில் பட்டதா, இல்லையா என்பதை ஸ்னிக்கோ மீட்டர் உதவியுடன் கண்டுபிடித்து முடிவை அறிவிப்பார்.
ஆனால், இதில்தான் ஒரு சிக்கல்,. இந்த டிஆர்எஸ் முறையில், 'அம்பயர் கால்' என்ற ஒரு வாய்ப்பும் தரப்பட்டுள்ளது. நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்ய ஒரு அணி கோரும்போது, களத்தில் உள்ள நடுவரே மீண்டும் அவரது முடிவை மறுபரிசீலனை செய்துகொள்ளலாம் என்பது இதன் பொருள். ஆனால் பெரும்பாலான நடுவர்கள் தாங்கள் கொடுத்த முடிவில் உறுதியாகவே இருப்பார்கள் என்பதால் டிஆர்எஸ் முறையிருந்தும் அதனால் பயனில்லாமல் போய்விடுகிறது. கண்களாலும், காதுகளாலும் தெளிவாக உணர முடியாததை தொழில்நுட்ப உதவியுடன் தெரிந்துகொள்ளத்தான் டிஆர்எஸ் உள்ளது. ஆனால் கள நடுவரையே மீண்டும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மூன்றாவது நடுவர் கூறுவது சரியான முறையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த அம்பயர் கால்தான் இன்றும் இந்தியாவுக்கு எதிராக முடிந்துவிட்டதாக கொந்தளிக்கின்றனர் ரசிகர்கள். ஆனால், ஜடேஜா வீசிய அந்த பந்து ஆப்-ஸ்டம்ப் திசைக்கு வெளியே பிட்ச் ஆகி உள்நோக்கி வந்தது. ஒருவேளை மூன்றாம் நடுவரே முடிவெடுத்திருந்தாலும், இதற்கு அவுட் கிடைத்திருப்பது சந்தேகம் என்பது குறிப்பிடத்தக்கது.