துபாய்: உலக கோப்பை இறுதி போட்டிக்கான நடுவர்கள் பெயரை ஐசிசி அறிவித்துள்ளது. அதில், நோபால் சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் அலீம்தார் பெயர் இடம்பெறவில்லை.
உலக கோப்பை கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே வரும் 29ம்தேதி மெல்போர்னில் இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இதற்கான அம்பயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: ஞ்சன் மதுகலே (போட்டி ரெப்ரி), குமார் தர்மசேனா மற்றும் ரிச்சர்ட் கேட்லிபோரா (கள நடுவர்கள்) மாராய்ஸ் எராஸ்மஸ் (மூன்றாம் நடுவர்) இயான் கவுல்ட் (நாலாம் நடுவர்) .
இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதியின்போது நடுவர்களாக குழுவில் ஒரேயொரு மாற்றம் மட்டும் செய்து இறுதி போட்டியிலும் ஐசிசி களமிறக்கியுள்ளது. அதாவது, நாலாம் நடுவராக இருந்த ரிச்சர்ட்டுக்கு பதிலாக இயான் கவுல்ட் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற அனைத்தும் அதே குழுதான்.
மேலும், இந்தியா-வங்கதேச காலிறுதி போட்டியின்போது நடுவராக இருந்த பாகிஸ்தானை சேர்ந்த அலீம்தார், அரையிறுதி மட்டுமில்லாமல், பைனலிலும் பெயர் சேர்க்கப்படவில்லை.
ரோகித்ஷர்மா அவுட்டான நல்ல பந்தை, நோபால் என்று அறிவித்து அவரை காப்பாற்றிவிட்டார் என்று அலீம்தார் மீது வங்கதேச ரசிகர்கள் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.