டெல்லி: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி மற்றும், சக வீரர் கவுதம் கம்பீருக்கு நடுவே, ஏழாம் பொருத்தம் என்பது ரசிகர்கள் அறிந்ததே.
டெல்லியை சேர்ந்த இருவரின் கேரக்டரும் ஒரே மாதிரியானவைதான். ஆக்ரோஷம்.. அதுதான் இவர்களுக்கு எல்லாமே. அதனால்தான், ஒரு உறைக்குள் இரு வாள்கள் போல இவர்களால் ஒத்துப்போக முடிவதில்லை.
2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது, எதிரணியிலிருந்த இவ்விருவரும் மைதானத்தில் சண்டை போட்டுக்கொண்ட காட்சி, ரசிகர்கள் மனதில் இன்னமும் திக், திக் போல அகலவில்லை.
2 வருடங்கள் பிறகு, இந்திய டெஸ்ட் அணியில் கம்பீருக்கு இப்போதுதான் வாய்ப்பு கிடைத்தது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற 3வது டெஸ்டில்தான் கம்பீர் களமிறங்கினார். சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினார். முன்னதாக, பயிற்சியின்போது, கோஹ்லி-கம்பீர் இணைந்து நின்று சிரித்தபடி இருந்த காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கூல் செய்திருந்தன.
ஆனால், டிவிட்டரில் பிசியாக இருக்கும் இவ்விரு வீரர்களும், அதில், ஒருவரை ஒருவர் ஃபாலோ செய்துகொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
டிவிட்டரில் கோஹ்லி 39 பேரை ஃபாலோ செய்கிறார். அதில் சச்சின் டெண்டுல்கர், அஸ்வின், ஜடேஜா போன்றோர் உள்ளனர். ஆனால் கம்பீரை, கோஹ்லி ஃபாலோ செய்யவில்லை. அதேபோல, கம்பீரும் கோஹ்லியை ஃபாலோ செய்வதில்லை.
கம்பீர் 81 பேரை ஃபாலோ செய்கிறார். இதில் சச்சின், சேவாக் உள்ளிட்டோரும் உண்டு. ஆனால் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான கோஹ்லியை கம்பீர் ஃபாலோ செய்யவில்லை. யார் முதலில் ஃபாலோ செய்வது என்ற பனிப்போர் இதற்கு காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இப்போது டெஸ்ட் அணியில் இரு வீரர்களும் இணைந்து விளையாடுவதால், இனி வருங்காலங்களில், இருவரும் ஒருவரை ஒருவர் ஃபாலோ செய்துகொள்ளுவார்கள் என நம்பலாம்.