மொகாலி: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 157 ரன்கள் விளாசி இந்திய வெற்றிக்கு வித்திட்ட விராட் கோஹ்லி பற்றி போட்டிக்கு பிறகு கேப்டன் டோணி புகழாரம் சூட்டினார்.
டோணி கூறுகையில், கோஹ்லி ஆகச்சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை. புள்ளிவிவரங்களை தூக்கிப்போட்டுவிடுங்கள். கோஹ்லி ஆடுவதை பார்ப்பதே ஒரு ஆனந்தம்தான்.
கோஹ்லியை பொறுத்தளவில் கிரிக்கெட் புத்தகத்தில் உள்ளதை போன்ற வழக்கமான (orthodox) ஷாட்டுகளை மட்டும்தான் ஆடுகிறார் (டிவில்லியர்சை போல திரும்பி, உருண்டு 360 டிகிரி கோணத்தில் கோஹ்லி ஆடுவதில்லை). ஆனாலும், அதி வேகமாக ரன்களை குவிக்க அவரால் முடிகிறது.
பவுலர்களை விளாச முடிவெடுத்துவிட்டால், கோஹ்லியால் அதை எளிதாக செய்து முடித்துவிட முடிகிறது. இதில்தான் கோஹ்லி ஆட்டத்தின் அழகே உள்ளது. ரிஸ்க் எடுத்து ஷாட்டுகளை ஆடாவிட்டாலும், ஸ்டிரைக் ரேட்டை சிறப்பாக கொண்டு செல்லும் கலையை கோஹ்லி கற்றுள்ளார். எந்த ஒரு வகை கிரிக்கெட்டாக இருந்தாலும், அங்கு கோஹ்லி ஜொலிக்கிறார்.
ஒவ்வொரு போட்டியிலுமே, புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று கோஹ்லி தேடுவதுதான் அவரது வெற்றிக்கு காரணம். இவ்வாறு டோணி புகழாரம் சூட்டினார்.
வழக்கமான ஆஃப் டிரைவ், ஆன் டிரைவ், ஃபுல் ஷாட் போன்றவற்றை வைத்துக்கொண்டே பவுலர்கள் கண்களில் விரல் விட்டு ஆட்டுபவர் கோஹ்லி. பொதுவாக வழக்கமான கிரிக்கெட்டிங் ஷாட்டுகளை ஆடும் வீரர்களை அதிக வேகத்தில் ரன் குவிக்க விடாமல் தடுப்பது எதிரணி கேப்டனுக்கு எளிது. ஏனெனில், குறிப்பிட்ட இடத்தில் ஃபீல்டர்களை நிறுத்தி ரன் குவிப்பு வேகத்தை கட்டுப்படுத்தி விடலாம். ஆனால், கோஹ்லி விஷயத்தில் எந்த அணி கேப்டனாலும், இதை செய்ய முடியவில்லை என்பதே நிதர்சனம்.