லண்டன்: ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக 8000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நேற்று படைத்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி.
சாம்பியன்ஸ் கோப்படை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வங்க தேசத்தை இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தோற்கடித்தது.
இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் விளாசினார். இந்த போட்டியில் 96 ரன்களை எடுத்த கேப்டன் கோஹ்லி 8 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் 88 ரன்களை சேர்த்த போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 ஆயிரம் ரன்களைக் கடந்தார். தனது 175-வது இன்னிங்சில் இந்த 8000 ரன்களைக் கடந்ததன் மூலம், ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 8000 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்க கேப்டன் ஏ பி டிவில்லியர்ஸ் 182 இன்னிங்சில் இந்த இலக்கைத் தொட்டதே சாதனையாக இருந்தது. அதை கோலி முறியடித்து இருக்கிறார்.
இந்திய தரப்பில் சௌரவ் கங்குலி 200 இன்னிங்சிலும், சச்சின் டெண்டுல்கர் 210 இன்னிங்சிலும், டோணி 241 இன்னிங்சிலும் 8 ஆயிரம் ரன்களைக் கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
28 வயதான விராட் கோஹ்லி இதுவரை 27 சதங்கள், 42 அரை சதங்கள் உட்பட 8,008 ரன்கள் சேர்த்துள்ளார்.