டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் பெங்களூர் டெஸ்டின் போது அநாகரீகமாக நடந்துகொண்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்ற போது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், எல்.பி.டபிள்யு முறையில் அவுட் ஆனார்.
அவர் எதிர்முனை வீரரை கலந்தாலோசித்த பிறகு, ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வெடுக்கும் அறையை நோக்கி தான் ஆட்டமிழந்தது தொடர்பாக மறுபரிசீலனை செய்யலாமா என்று சைகையில் கேட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை கிளப்பியது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோஹ்லி, ''நான் பேட்டிங் செய்த போதே அவர்கள் இவ்வாறு இருமுறை செய்ததைப் பார்த்தேன். அதாவது டி.ஆர்.எஸ். கேட்க ஓய்வறையை ஆஸ்திரேலிய வீரர்கள் பார்ப்பதை நான் இருமுறை கண்டேன். அதனால்தான் நடுவர் ஸ்மித்தை நோக்கி வந்து அவரை அனுப்பி வைத்தார்'' என்று கூறினார். மேலும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் தனது எல்லையை மீறி விட்டார் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியே ஊடகங்கள் விராட் கோஹ்லியை கடுமையாக சாடி வருகின்றனர். பெங்களூர் டெஸ்டின் போது விராட் கோஹ்லி அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அதிகாரிகள் மீது விராட் கோஹ்லி குளிர்பான பாட்டிலை வீசியதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.