கொல்கத்தா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு டி20 போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்த நிலையில் கேப்டன் டோணி, தனது ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார். அவரது புதிய ஸ்டைல் அணிக்கு லக் கிடைக்க வழி செய்யுமா என்று சில ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். சில ரசிகர்களோ, டோணி கவலையே இன்றி இப்படி முடியில் கவனம் வைத்துள்ளாரே என்கிறார்கள்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தர்மசாலா மற்றும் கட்டாக் நகரங்களில் நடைபெற்ற முதல் இரு டி20 போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்த நிலையில், 3வது போட்டி கொல்கத்தா, ஈடன் கார்டன் கிரவுண்டில் இம்மாதம் 8ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, கொல்கத்தாவுக்கு நேற்று இந்திய அணி வீரர்கள் வந்து சேர்ந்தனர். ஏர்போர்ட்டில் டோணியை பார்த்தோருக்கு இன்ப அதிர்ச்சி.
கட்டாக்கில் இருந்து கொல்கத்தா வரும் கேப்பில், ஹேர்கட் செய்திருந்தார் டோணி. இரு புறங்களிலும், ஷாட்டாக முடியை வெட்டி புதிய ஸ்டைலில் டோணி காட்சியளித்தார். டோணி ஹேர்ஸ்டைல்களை மாற்றுவதில் கில்லாடி. முதலில் நீளமான முடியுடன் இந்திய அணியில் அறிமுகமாகி அதை ஒரு ஸ்டைலாக வைத்திருந்தார் டோணி. அடுத்தடுத்து அவரது தலைமையில் இந்தியா வெற்றி பெற, அந்த கொண்டை ஒரு காரணம் என்ற பேச்சும் இருந்தது.
ஒருவேளை, புதிய ஸ்டைல் அடுத்த போட்டியில் இந்தியாவுக்கு லக்கை பெற்றுத்தரவும் வாய்ப்புள்ளது. பார்க்கலாம்.