அரை இறுதியில் இந்திய அணி தோற்றதற்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் என்ன சம்பந்தம்... எல்லார் மாதிரியும் அவரும் கிரிக்கெட் மேட்ச் பார்க்கப் போனார். அதற்காக அவரை விமர்சிப்பது அரைவேக்காட்டுத்தனம், என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
விராட் கோஹ்லியும், அவர் காதலி அனுஷ்கா சர்மாவும்தான் இப்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரது மோசமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
அனுஷ்கா சர்மா சிட்னி மைதானத்துக்குப் போனதால்தான், விராட் கோஹ்லி சரியாக ஆடவில்லை என முதலில் கிண்டலாகக் கூறியவர்கள், பின்னர் அதையே ரொம்ப சீரியஸாகக் கூறி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அனுஷ்கா சர்மா படங்களைப் புறக்கணிக்க வேண்டும், அவர் வீட்டு மீது கல்லடிக்க வேண்டும் என்றெல்லாம் ஒரு கோஷ்டி கிளம்பியுள்ளது.
இதனால் அவர்கள் இருவருக்குமே பலத்த பாதுகாப்பு தரவேண்டிய சூழல்.
இந்த நிலையில் அனுஷ்கா சர்மா, விராட் கோஹ்லி இருவருக்கும் ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் சவுரவ் கங்குலி.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இரண்டு பேர் காதலிப்பதில் என்ன தவறு இருக்கிறது? எல்லாரையும் போல இந்த மேட்சை பார்க்க விரும்பி அனுஷ்கா ஆஸ்திரேலியா போனார். கோஹ்லி சரியாக விளையாடாததற்கு அனுஷ்காவைத் திட்டுவது முட்டாள்தனம்.
நமது அணி சிறந்த அணிதான். சில பொதுவான பலவீனங்கள் உள்ளன. அவற்றைச் சரி செய்தால், அடுத்த உலகக் கோப்பையில் இன்னும் சிறப்பாக விளையாட முடியும்," என்றார்.