பாங்காங்: மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
பெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாங்காங்கில் நடைபெற்று வந்தது. மொத்தம் 6 அணிகள் இதில் பங்கேற்றன.
கடைசி லீக்கில் தாய்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஏற்கனவே இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில் நுழைந்திருந்தது.
இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி இன்று பாங்காங்கில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களை எடுத்தது.
இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அதிகபட்சமாக 73 ரன்களை குவித்தார். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களே எடுத்து தோல்வியைத் தழுவியது.
பாகிஸ்தானை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இந்திய அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.