லண்டன்: மகளிர் உலககோப்பை கிரிக்கெட்டி லீக் போட்டியில், மந்தனாவின் சிறப்பான ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின. டான்டனில் இந்த போட்டி நடைபெற்றது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் ஆரம்பித்தது. டாசில் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய வீராங்கனைகளின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் தொடக்க வீரராக ஹைய்லே மேத்யூஸ், பெலிகியா வால்டர்ஸ் களமிறங்கினர்.
பெலிகியா வால்டர்ஸ் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஏக்தா பிஷ்ட் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் பெவுலியன் திரும்பினர். இதநால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக ஹைய்லே மேத்யூஸ் 57 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். இந்தியா சார்பில் தீப்தி ஷர்மா, பூணம் ரவுட், ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மேற்கிந்திய தீவுகளை தொடர்ந்து 184 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக பூனம் ரவுட் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். ஷமிலா கொன்னல் பந்துவீச்சில் கேட்ச் முறையில் டக் அவுட் முறையில் வெளியேறினார் பூணம் ரவுட். அடுத்து வந்த தீப்தி ஷர்மா ஜொலிக்கவில்லை. பின்னர் பூணமுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் மிதாலி ராஜ். இருவரும் மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை பதம் பார்த்தனர்.
இதனிடையே 46 ரன்கள் எடுத்தநிலையில் மிதாலி ராஜ் வெளியேறினார். ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 42.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மந்தனா 106 ரன்கள் குவித்தார். 108 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்சர்கள் உதவியோடு இந்த ரன்களை குவித்து அசத்தினார். மோனா மேஷ்ரம் 18 ரன்களோடு களத்தில் இருந்தார்.