மும்பை: இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கு நல்ல தொடக்கமாக, இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் கேப்டன் மிதாலி ராஜ்.
சமீபத்தில், இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் மிதாலி ராஜ் மிகச்சிறப்பான பேட்டிங் செய்து, அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.
இறுதிப் போட்டியில், இந்திய அணி, இங்கிலாந்திடம் சொற்ப ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைக் கண்டது. எனினும், ரசிகர்களிடையே இந்திய அணிக்கு பெரும் பாராட்டுகள் குவிந்தன. பரிசுகளும் கொட்டின.
நடந்து முடிந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பற்றி, மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் கூறுகையில், ''இது எங்களுக்கு சிறப்பான அனுபவமாக அமைந்தது. கடந்த 2005ம் ஆண்டில் இதுபோன்றே இறுதிப் போட்டி வரை முன்னேறினோம். அதுபோன்று, தற்போதும் இறுதிப் போட்டிக்குச் சென்று, மகளிர் கிரிக்கெட் அரங்கில் இந்தியாவுக்கு பாராட்டு பெற்று தந்துள்ளோம்.
இது மகளிர் கிரிக்கெட்டுக்கு நல்ல தொடக்கம்தான். நல்ல காலமும் தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் மேலும் பல வெற்றிகளைப் பெற, இது முன்மாதிரியாக அமையும். மொத்தத்தில் உலக கோப்பை தொடர், எங்களுக்கு சிறப்பான படிப்பினை கொடுத்துள்ளது,'' எனத் தெரிவித்துள்ளார்.