டெல்லி: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி லண்டனில் இன்று நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
உலகக் கோப்பை லீக் சுற்றில் நடந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக பங்காற்றி வெற்றிகளை குவித்தது. அதேபோல் இன்றைய இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா கோப்பை கைப்பற்றும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலாக உள்ளது. இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என கிரிக்கெட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
அந்த வகையில் உலகக் கோப்பையில் வெற்றி பெற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், "உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற, நமது 125 கோடி மக்களுடன் இணைந்து வாழ்த்து தெரிவிக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
As our women's cricket team plays the World Cup finals today, I join the 125 crore Indians in wishing them the very best! @BCCIWomen
— Narendra Modi (@narendramodi) July 23, 2017
இதுதவிர கேப்டன் மிதாலி ராஜ் உள்பட இந்திய மகளிர் அணியின் ஒவ்வொரு வீராங்கனையின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களின் பலம் குறித்தும் பிரதமர் மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.