டெல்லி: டி20 கிரிக்கெட்டில் முச்சதம் விளாசி உலக சாதனை படைத்துள்ளார் டெல்லி பேட்ஸ்மேன் மோகித் அலாவத்.
ரஞ்சி கோப்பை தொடரில் டெல்லி அணிக்காக ஆடும் இவர், உள்ளூர் டி20 போட்டியொன்றில் இச்சாதனையை படைத்தார். டெல்லியில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் மாவி லெவன் அணிக்காக களமிறங்கிய மோகித், பிரண்ட்ஸ் லெவன் அணிக்கு எதிராக இச்சாதனையை படைத்தார்.
வெறும் 72 பந்துகளில் 14 பவுண்டரிகள், 39 சிக்சர்களுடன் 300 ரன்களை குவித்தார், இந்த 21 வயது இளம் வீரர். அதிலும் குறிப்பாக ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசி 5 பந்துகளிலும் சிக்சர் விளாசி இந்த மைல்கல்லை அவர் எட்டினார். அவரது அணி 20 ஓவர்களில் 416 ரன்களை குவித்தது.
டி20 போட்டியொன்றில் இதுவரை உலகில் எங்குமே முச்சத சாதனை படைக்கப்படவில்லை என்பதால் மோகித் சாதனை உலக ரெக்கார்டாகியுள்ளது. லலிதா பார்க் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.