லார்ட்ஸ் சாதனைக்கு வெயிட்டிங்
இந்தியா - இங்கிலாந்து இடையிலான மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இங்கு இந்தியா வென்றால் அது மறக்க முடியாத வெற்றியாக அமையும்.
முதல் முறையாக
இதே லார்ட்ஸ் மைதானத்தில்தான் 1932ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியது. இதே லார்ட்ஸ் மைதானத்தில்தான் 1983ம் ஆண்டு இந்தியா தனது முதல் உலகக் கோப்பையை வென்றது.
கபில் கலக்கல்
இந்த லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவை வெற்றிக் கோப்பையை ஏந்த வைத்தவர் ஹரியானா சிங்கம் கபில்தேவ். அதன் பிறகு நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்னர் டோணிதான் நமக்கு 2வது கோப்பையைப் பெற்றுக் கொடுத்தார்.
கபிலாக மாறுவாரா மித்தாலி
இப்போது இதே லார்ட்ஸ் மைதானத்தில்தான் இந்தியா - இங்கிலாந்து இடையிலான இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்தியா வென்றால் அதில் பல சாதனைகள் நமக்கு கிடைக்கும். இந்தியாவுக்கு இது முதல் கோப்பையாக அமையும். கபிலுக்குப் பிறகு அதே மைதானத்தில் சாதனை படைத்த கேப்டன் என்ற பெயர் மித்தாலிக்கும் கிடைக்கும்.
இன்னொரு பெருமை
இந்திய ஆடவர் அணிக்கும் இங்குதான் முதல் கோப்பை கிடைத்தது. அதேபோல மகளிர் அணி வென்றால், மகளிர் அணியின் முதல் கோப்பையும் இதே மைதானத்தில் கிடைத்த பெருமை நமக்கு வந்து சேரும்.
2வது இறுதிப் போட்டி
இந்தியா இதற்கு முன்பு 2005ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. ஆனால் அதில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. தற்போது 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இந்த முறை மித்தாலி அன் கோவின் தீப்பொறி ஆட்டம் காரணமாக இந்தியா நிச்சயம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
லேடி கபில் தேவாக மித்தாலி ராஜ் மாறப் போகும் அந்த தருணத்திற்காக ஒட்டுமொத்த இந்தியாவும் இப்போது இருந்தே வெயிட்டிங்!