தர்மசாலா: ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் வழங்கிய பிறகு பேட்ஸ்மேனை கட்டுப்படுத்துவது கஷ்டம்தான் என்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அக்ஷர் பட்டேல் பந்து வீச்சு குறித்து டோணி அதிருப்தி வெளிப்படுத்தினார்.
இந்தியாவுக்கு எதிராக 200 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திச் சென்ற தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
ஆட்டத்தின் போக்கை மாற்றியதில் 16வது ஓவர் முக்கியமானது. அந்த ஓவரை ஸ்பின்னரான அக்ஷர் பட்டேல் வீச, டுமினி விளாசிய, 3 சிக்சர்கள் உதவியுடன் அந்த ஓவரில் 22 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரை வீசிய புவனேஸ்வர் குமாரின் முதல் இரு பந்துகளும், சிக்சர் மற்றும் பவுண்டரியாக பறக்க, ஆட்டமே முற்றிலும் திசை திரும்பியது.
ஆட்டத்திற்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் டோணி, "ஒரு பவுலரின் பந்து வீச்சு அடிபடுகிறது என்றால், தனது பந்து வீச்சில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதைவிடுத்து 3 சிக்சர்களை ஒரே ஓவரில் அடிக்கும் அளவுக்கு பந்தை வீசினால், அந்த பேட்ஸ்மேனை கட்டுப்படுத்துவது கஷ்டம்.
அதேநேரம், அக்ஷர் பட்டேல், அஸ்வின் ஆகிய இரு ஸ்பின்னர்களும், பேட்டிங்கிற்கு முற்றிலுமாக சாதகமாக இருந்த அந்த பிட்சில், சிறப்பாக பந்து வீசினர். அந்த ஒரு ஓவரை தவிர்த்து பார்த்தால் ஸ்பின்னர்கள் பங்களிப்பு நன்றாகவே இருந்தது. ஸ்ரீநாத் அரவிந்த், இடது கை வேகப்பந்து வீச்சாளர். எனவே அணியின் பந்து வீச்சில் ஒரு மாறுபாடுக்காக அவர் இணைக்கப்பட்டார். மேலும் ஐபிஎல் தொடர்களில் அவர் சிறப்பாக பந்து வீசிய அனுபவம் உள்ளவர் என்பதும் அணியில் அவர் சேர்க்கப்பட காரணம்.
பவுலர்களுக்கு சாதகமில்லாத இந்த பிட்சில் அரவிந்த் முழு திறமையையும் காண்பிக்க முடியாது என்பதையும் உணர்ந்துள்ளோம். அமித் மிஸ்ராவை அணியில் சேர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. 7 பேட்ஸ்மேன்கள் வேண்டும் என்ற எங்கள் எண்ணமே மிஸ்ராவை சேர்க்க முடியாததற்கு காரணம். இவ்வாறு டோணி தெரிவித்தார்.