போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே இல்லாத நிலையில் மூத்த வீரர்களான டோணி, யுவராஜ். கோஹ்லி ஆகியோர் வழிநடத்தலாம் என பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பின்னர் கேப்டன் ஹோக்லியுடனான மோதலால் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் அனில் கும்ப்ளே. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்பது தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. போர்ட் ஆப் ஸ்பெயினில் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பயிற்சியாளர் இப்போது இல்லாத நிலையில் மூத்த வீரர்கள் யுவராஜ்சிங், டோணி, கோஹ்லி ஆகியோர் இந்திய அணியை வழிநடத்த முடியும். பயிற்சியாளர் இல்லை என்பது அணியை பாதிக்கவில்லை.
அனைவருமே தொழில்முறையாக விளையாடுகிறவர்கள். மூத்த வீரர்கள் கலந்துரையாடினாலே அவர்கள் தரும் யோசனைகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.
இவ்வாறு சஞ்சய் பங்கர் கூறினார்.