பார்சிலோனா: ஸ்பெயினில் நடந்த கால்பந்து லீக் போட்டியின்போது எதிர் அணி வீரரை அறைந்தும், உதைத்தும் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனோல்டோ கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று பிரேசில் வீரர் நெய்மார் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்பெயினில் தற்போது லா லிகா கால்பந்துத் தொடர் நடந்து வருகிறது. இதில் பார்சிலோனா அணி சார்பில் நெய்மார் ஆடி வருகிறார். அதேபோல போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவரான ஸ்டார் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார்.
இந்த நிலையில் ரியல் மாட்ரிட் - கொர்டோபா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால் ரொனால்டோவின் ஆட்டம்தான் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது.
கொர்டபோ அணியின் தடுப்பாட்டக்காரர் எடிமர் பிராகாவை ஒரு கட்டத்தில் திடீரென உதைத்தார் ரொனால்டோ. அதேபோல இன்னொரு வீரரான ஜோஸ் கிரஸ்போவை கன்னத்தில் அறைந்து விட்டார். இதனால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு போட்டியிலிருந்து விலக்கப்பட்டார் ரொனால்டோ. அவருக்கு 2 போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு நெய்மார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது தவறான செயல். அவரைக் கடுமையாக தண்டிக்க வேண்டும்.
பார்வர்ட் வீரர்களுக்கு இதுபோல நேரிடுவது இயல்புதான். ஆனால் இது தவறானது. இதைத் தவிர்த்திருக்க வேண்டும். பார்வர்ட் வீரர்களை பிற வீரர்கள் கோபப்பட தூண்டிவிடுவார்கள். ஆனால் நாம்தான் அதில் அடக்கமாக இருக்க வேண்டும்.
ஜினெடின் ஜிடேனுக்கும் இதுபோல நேர்ந்துள்ளது. எனக்கும் நேர்ந்துள்ளது. ரொனால்டோவையும் அதுபோலத்தான் எதிரணியினர் தூண்டியுள்ளனர். ஆனால் அதற்காக எதிரணியினரை உதைப்பது, அறைவது என்பது தவறானது. கண்டிப்பாக அவரைத் தண்டிக்க வேண்டும். கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கோபமாக கூறியுள்ளார் நெய்மார்.
ஆனால் போட்டிக்குப் பின்னர் டிவிட்டர் மூலமாக ஸாரி சொல்லி விட்டு அமைதியாகி விட்டார் ரொனால்டோ.